தேர்தல் செலவுக்காக கடாபியிடம் பணம் பெற்றதாக சர்கோசி மீது திடுக்கிடும் புகார்.
[Wednesday, 14/03/2012 11:31 AM]
கடந்த தேர்தலின் போது பிரான்ஸ் அதிபர் சர்கோசி கடாபியிடம் ரூ.325 கோடி பெற்றதாக பரபரப்பு புகார் வெளியாகி உள்ளது. லிபியாவில் கொல்லப்பட்ட சர்வாதிகாரி கடாபியின் ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போராட்டத்துக்கு 'நேட்டோ' படையில் இடம் பெற்றிருந்த பிரான்ஸ் உதவி செய்தது.
அப்போது கடந்த 2007-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது அதிபர் நிக்கோலஸ் சர்கோசிக்கு அதிபர் கடாபி பண உதவி செய்தார் என அவரது மகன் சயீப்-அல்-இஸ்லாம் தெரிவித்தார். இதை அதிபர் சர்கோசியின் உதவியாளர்கள் திட்டவட்டமாக மறுத்தனர். இந்த நிலையில் பிரான்சில் இருந்து வெளியாகும் மீடியா பார்ட் என்ற ஆன்லைன் பத்திரிகை சமீபத்தில் ஒரு செய்தி வெளியிட்டது.
அதில் கொல்லப்பட்ட லிபியா அதிபர் மும்மர் கடாபியிடம் நிகோலஸ் சர்கோசி கடந்த தேர்தலின் போது பிரசாரத்துக்காக ரூ.325 கோடி நிதி உதவி பெற்றார். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பரில் இப்பணம் அவருக்கு வழங்கப்பட்டது. அப்போது சர்கோசி உள்துறை மந்திரியாக இருந்தார். இப்பணத்தை பெற சர்கோசியும் அவரது உதவியாளர்களும் லிபியா சென்று இருந்தனர்.
இது உண்மையா? இல்லையா? என கேள்வி எழுப்பி இருந்தது. இதை அதிபர் சர்கோசி மறுத்துள்ளார். இது குறித்து அவரது செய்தி தொடர் பாளர் பிராங்க் லூவியர் அளித்த பேட்டியில், இந்த குற்றச்சாட்டு முட்டாள் தனமானது. மிகவும் அபத்தமான பொய் செய்தி என மறுத்தார். கடந்த 2005 அக்டோபரில்தான் சர்கோசி லிபியா சென்றார். 2006-ம் ஆண்டு செல்லவில்லை. மீடியா பார்ட் ஆன்லைன் பத்திரிகைக்கு இது பற்றிய ஆவணங்கள் கிடைத்தது எப்படி என்பது குறித்து நீதி விசா ரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.